2931. தூரியக் குரலின், வானின்
     முகிற் கணம் துணுக்கம்கொள்ள;
வார் சிலை ஒலியின், அஞ்சி,
     உரும் எலாம், மறுக்கம்கொள்ள;
ஆர்கலி, ஆர்ப்பின், உட்கி
     அசைவுற; அரக்கர் சேனை,
போர் வனத்து இருந்த வீரர்
     உறைவிடம் புக்கது அன்றே.

    தூரியக் குரலின் - வாத்தியங்களின் முழக்கத்தால்; வானின் முகிற்
கணம் -
ஆகாயத்திலுள்ள மேகக் கூட்டங்கள்; துணுக்கம் கொள்ள -
அஞ்சி நடுக்கம் அடையவும்; வார்சிலை ஒலியின் - நீண்ட விற்களின்
நாணொலியால்; உரும் எலாம் அஞ்சி - இடிகளெல்லாம் பயந்து; மறுக்கம்
கொள்ள -
கலக்கமடையவும்; ஆர்ப்பின் - (கர்ச்சனை முதலிய)
ஆரவாரத்தால்; ஆர்கலி உட்கி அசைவு உற - கடல்களும் அஞ்சி
நடுக்கமுறவும்; அரக்கர்சேனை - இராக்கதச் சேனை; அன்றே -
அப்பொழுதே; _ வனத்து இருந்த போர் வீரர் உறைவிடம் - அந்தக்
காட்டில் தங்கியிருந்த போரில் வல்ல வீரர்களான (இராமலக்குவர்) வசிக்கும்
இடத்தை; புக்கது - போய் அடைந்தது.

     தூரியங்களாகிய வாத்தியங்களின் ஒலியும் சிலையின் நாணொலியும்
மிகுந்து தோன்ற அரக்கச் சேனை ஆரவாரம் செய்து கொண்டு
இராமலக்குவர் இருந்த இடத்தைச் சென்றடைந்தது என்பது, - தொடர்புயர்வு
நவிற்சியணி. அன்று, ஏ - அசையுமாம்.

     சேனை முழக்கத்திற்கு மேகம், கடல் இவற்றின் முழக்கங்கள்
உவமையாம்.                                                 57