2933. | தூளியின் படலை வந்து தொடர்வுற, மரமும் தூறும் தாள் இடை ஒடியும் ஓசை 'சடசட' ஒலிப்ப, கானத்து ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி, மீளி மொய்ம்பினரும், 'சேனை மேல்வந்தது உளது' என்று உன்னா, |
தூளியின் படலை - தூசியின் தொகுதி; வந்து தொடர்வு உற - முன்னே வந்து படியவும்; மரமும் தூறும் - (அக் காட்டிலிருந்த) மரங்களும் புதர்களும்; தாள்இடை ஒடியும் ஓசை - வரும் அரக்க வீரர்களின் கால்களில் அகப்பட்டு ஒடிவதால் உண்டாகிய ஓசை; 'சடசட' ஒலிப்ப - சடசடவென்று ஒலிக்கவும்; கானத்து ஆளியும் - காட்டிலுள்ள யாளிகளும்; அரியும் - சிங்கங்களும்; அஞ்சி இரிதரும் - பயந்து நிலைகெட்டு ஓடுகின்ற; அமலை நோக்கி - பேராரவாரத்தைப் பார்த்து; மீளி மொய்ம்பினரும் - வலிய தோள்களையுடைய இராமலக்குவரும்; சேனை மேல் வந்தது உளது என்று உன்னா - அரக்கர் சேனை தம்மோடு போருக்கு வந்துள்ளது என்று எண்ணி.. உன்னா என்னும் செயவென் எச்சம் அடுத்த செய்யுளிலுள்ள மொழியலுற்றான் என்ற வினை கொண்டு முடியும். படலை - கூட்டம், தொகுதி; அமலை - பேரொலி. சடசட - ஒலிக்குறிப்பு. தூளியின் தொகுதியும், சடசட ஒலியும், ஆளியும் சிங்கமும் அஞ்சியோடும் ஆரவாரமும் நோக்கி மீளி மொய்ம்பினரான இராமலக்குவரும் அரக்கர் சேனை போர் செய்ய வந்துள்ளது என்று எண்ணினர் என்பது. 59 |