2935. | 'நெறி கொள் மா தவர்க்கு, முன்னே நேர்ந்தனென்: "நிருதர் ஆவி பறிக்குவென் யானே" என்னும் பழமொழி பழுதுறாமே, வெறி கொள் பூங் குழலினாளை, வீரனே! வேண்டினேன் யான், குறிக்கொடு காத்தி; இன்னே கொல்வென், இக் குழுவை' என்னா, |
வீரனே - வீரனே; நெறி கொள் மாதவர்க்கு - தவவொழுக்கத்தைக் கடைப் பிடிக்கும் தவ முனிவர்களுக்கு; முன்னே நேர்ந்தனென் - முன்னமே நான் உடன்பட்டு; யானே நிருதர் ஆவி பறிக்குவென் - நானே அரக்கர்களின் உயிரைக் கவர்வேன்; என்னும் பழமொழி - என்று உறுதிமொழி கூறிய பழைய வார்த்தை; பழுதுறாமே - வீண் போகாதவாறு; இக் குழுவை இன்னே கொல்வேன் - இந்த அரக்கர் கூட்டத்தை இப்பொழுதே கொல்வேன்; வெறி கொள் பூங் குழலினாளை - மணங்கமழும் பூக்களைச் சூடின கூந்தலையுடைய சீதையை; குறிக் கொடுகாத்தி - நீ கருத்தோடு காப்பாய்; யான் வேண்டினேன் - நான் உன்னை இது வேண்டினேன்; என்னா - என்று (இராமன் இலக்குவனிடம்) சொல்லி.....; 'புட்டில் கட்டிச் சாபமும் தரித்தான்' என வரும் அடுத்த செய்யுளோடு தொடரும். அரக்கர்களுக்கு அஞ்சிச் சரணடைந்த தண்டகாரணிய முனிவர்களுக்கு இராமன் அபயமளித்தது. அகத்தியப் படலத்தில் கூறப்பெற்றது. குறிக் கொள்ளுதல்- உன்னிப்பாய்ப் பார்த்துக்கொள்ளுதல். 61 |