'இப் போரினை எனக்கு அருள்க என, இலக்குவன் மீண்டும் வேண்டுதல்

2937.'மீள அருஞ் செருவில், விண்ணும்
     மண்ணும் என்மேல் வந்தாலும்,
நாள் உலந்து அழியும் அன்றே? நான்
     உனக்கு உரைப்பது என்னே?
ஆளியின் துப்பினாய்! இவ் அமர்
     எனக்கு அருளிநின்று, என்
தோளினைத் தின்னுகின்ற சோம்பினைத்
     துடைத்தி' என்றான்.

    ஆளியின் துப்பினாய் - யாளி போன்ற வலிமையுடையவனே!;
விண்ணும் மண்ணும் - வானுலகத்து உயிர்களும், இம் மண்ணுலகில்
வாழ்பவர்களும்; மீள அருஞ் செருவில் - வென்று திரும்பிச் செல்ல
முடியாத போரில்; என் மேல் வந்தாலும் - என்னை எதிர்த்துத் திரண்டு
வந்தாலும்; நாள் உலந்து அழியும் அன்றே - (அந்த வானுலக
உயிர்களும் நிலவுலக உயிர்களும் ஆகிய யாவும்) என் முன்னே தம்
ஆயுட் காலம் ஒழிந்து அழிந்திடுமல்லவா?; நான் உனக்கு உரைப்பது
என்னே -
இதைப் பற்றி நான் உனக்குச் சொல்ல வேண்டுவது உண்டோ?;
இவ் அமர் எனக்கு அருளி நின்று - (ஆதலால்) இந்தப் போரை எனக்கு
நீ கொடுத்து; என் தோளினைத் - என் தோள்களை; தின்னுகின்ற
சோம்பினை -
வருத்துகின்ற சோம்பலை; துடைத்தி என்றான் - (நீ)
போக்குவாய் என்று இலக்குவன் இராமனை நோக்கிக் கூறினான்.

     'நான் உனக்கு உரைப்பதென்னே' என்றது உனக்குத் தெரிந்ததேயென
வற்புறுத்தியவாறு. சோம்பு : போர்த் தொழிலில்லாமல் கிடக்கின்ற மந்த
குணம். அடுத்த செய்யுளில் (2938) 'என்றனன் இளைய வீரன்' என்றதனால்
இப் பாட்டிற்கு எழுவாய் இலக்குவன் என்பது அறியப்படும்.          63