2939. | குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர தழையுறு சாலைநின்றும், தனிச் சிலை தரித்த மேரு, மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண, முழையின் நின்று எழுந்து செல்லும் மடங்கலின், முனிந்து, சென்றான். |
குழையுறு - காதணி பொருந்திய; மதியம் பூத்த - சந்திரனை மலராகப் பெற்ற; கொம்பு அனாள் - ஒரு பூங்கொம்பையொத்தவளான சீதை; குழைந்து சோர - தளர்ந்து வருத்தமடைய; தழை உறு சாலை நின்றும் - தழைகளால் அமைந்த அந்தப் பர்ணசாலையிலிருந்து; தனிச் சிலை தரித்த மேரு - ஒப்பற்ற வில்லையேந்திய மேரு மலையைப் போன்ற இராமன்; மழை என முழங்குகின்ற - மேகம்போல ஆரவாரிக்கின்ற; வாள் எயிற்று அரக்கர் காண - கூரிய பற்களையுடைய அந்த அரக்கர்கள் பார்க்கும்படி; முழையின் நின்று - மலைக் குகையிலிருந்து; எழுந்து செல்லும் மடங்கலின் - எழுந்து வெளியே செல்லும் ஆண் சிங்கம் போல; முனிந்து சென்றான் - கோபத்தோடு புறப்பட்டான். பர்ணசாலையிலிருந்து இராமன் புறப்பட்ட காட்சி மலைக் குகையிலிருந்து ஒரு சிங்கம் முழங்கி வெளியே புறப்படுவது போல உள்ளது என்றார். குழையுறு மதியம் பூத்த கொம்பு - இல் பொருளுவமை. குழையென்னும் அணியைப் பூண்ட முகம் முழு நிலவையும், அழகிய திருமேனி பூங் கொம்பையும் ஒத்திருப்பதால் இவ்வாறு கூறினார். மேரு - உவமையாகுபெயர். சிலை தந்த மேரு - இல்பொருளுவமை. 65 |