சூர்ப்பணகை கரனுக்கு இராமனைக் காட்டுதல்

2940.தோன்றிய தோன்றல் தன்னைச்
     சுட்டினள் காட்டி, சொன்னாள்-
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு
     வெந் தீ இது என்ன,
தான் தொடர் குலத்தை எல்லாம்
     தொலைக்குமா சமைந்து நின்றாள்-
'ஏன்று வந்து எதிர்ந்த வீரன் இவன்,
     இகல் இராமன்' என்றே.

    வான் தொடர் மூங்கில் தந்த - ஆகாயத்தையளாவி வளர்ந்த
மூங்கில்கள் (உராய்வதால்) உண்டாக்கிய; வயங்கு வெம் தீ இது என்ன -
விளங்குகின்ற கொடிய நெருப்பைப் போல; தான் தொடர் குலத்தை
எல்லாம் -
தான் பிறந்த குலம் முழுவதையும்; தொலைக்குமா சமைந்து
நின்றாள் -
அழிக்கும்படி அச் செயலில் பொருந்தி நின்ற சூர்ப்பணகை;
தோன்றிய தோன்றல் தன்னை - வெளியே தென்பட்ட இராமபிரானை;
சுட்டினள் காட்டி - சுட்டிக் காண்பித்து; ஏன்று வந்து எதிர்த்த வீரன்
இவன் -
போர் கோலம் பூண்டு வந்து எதிர்ப்பட்ட இந்த வீரனே; இகல்
இராமன் என்று -
(நம்மிடம்) பகைமை கொண்ட இராமன் என்று;
சொன்னாள் - கூறினாள். ஏ - அசை.

     மூங்கிலில் பிறந்த தீ அந்த மூங்கில் தொகுதிகளையெல்லாம்
எரித்தழிப்பது போல அரக்கர் குலத்திலே பிறந்த சூர்ப்பணகை அந்த
அரக்கர் குலத்தையெல்லாம் பூண்டோடு அழிப்பதற்கு மூல காரணமாக
இருந்தமையால் அவளை மூங்கிலிலிருந்து தோன்றும் நெருப்புக்கு உவமை
கூறினார் சுட்டினாள் : முற்றெச்சம்.                         66