கரன் இராமனுடன் தானே பொருவேன் எனல்

2941. கண்டனன், கனகத் தேர்மேல்,
     கதிரவன் கலங்கி நீங்க,
விண்டனன் நின்ற, வென்றிக்
     கரன் எனும் விலங்கல் தோளான்;
'மண்டு அமர் யானே செய்து, இம்
     மானிடன் வலியை நீக்கி,
கொண்டனென் வாகை' என்று,
     படைஞரைக் குறித்துச் சொன்னான்.

    கதிரவன் கலங்கி நீங்க - பல ஆயிரம் கதிர்களையுடைய சூரியனும்
கலக்கமுற்று நீங்கும்படி; கனகத் தேர்மேல் - பொன் மயமான தேரின்
மேல்; விண்டனன் நின்ற - பகைத்து நின்ற; வென்றிக் கரன் எனும் -
வெற்றியையுடைய கரன் என்கிற; விலங்கல் தோளான் - மலைகள்
போன்ற தோள்களையுடைய அரக்க வீரன்; கண்டனன் - (இராமபிரானைக்)
கண்டு; படைஞரைக் குறித்து - தன் படை வீரர்களை நோக்கி; 'யானே
மண்டு அமர் செய்து -
நான் ஒருவனே இந்தப் பெரிய போரைச் செய்து;
இம் மானிடன் வலியை நீக்கி - இந்த மனிதனது ஆற்றலை அழித்து;
வாகை கொண்டனென்' - வெற்றிமாலையைச் சூடுவேன்; என்று
சொன்னான் -
என்று கூறினான்.

     தனிப்பட இராமன் ஒருவனே போர் செய்ய எதிரே நிற்பதால் அது
கண்ட கரன் 'இவனை வெல்வதற்குத் துணையாக எனக்குச் சேனையோ
துணைப் படையோ வேண்டா; நானே வெல்வேன்' என்று எளிதாகக்
கூறினான் என்பது.

     விரைவும் தெளிவும் பற்றிக் கொண்டனன் இறந்த காலத்தால்
கூறினான்;  காலவழுவமைதி. விண்டனன் கண்டனன் - முற்றெச்சங்கள்.
விண் : இடவாகுபெயர். விலங்கல் : மலை - தொழிற்பெயர். விலங்கல்
தோள் : மலை போல வலிமையும் பெருமையும் கொண்டமையால்.      67