கலிநிலைத் துறை 2944. | 'குருதி மா மழை சொரிந்தன, மேகங்கள் குமுறி; பருதி வானவன் ஊர் வளைப் புண்டது; பாராய்,- கருது வீர!- நின் கொடிமிசைக் காக்கையின் கணங்கள் பொருது வீழ்வன, புலம்புவ, நிலம் படப் புரள்வ; |
வீர - வீரனே!; மேகங்கள் குமுறி - மேகங்கள் முழங்கி; குருதி மா மழை சொரிந்தன - மிக்க இரத்த மழையைப் பொழிந்தன; பருதி வானவன் - சூரியனை; ஊர் வளைப்புண்டது - பரிவேடம் சூழ்ந்து கொண்டது; பாராய் - (அவற்றை) பார்ப்பாய்; காக்கையின் கணங்கள் - காக்கைக் கூட்டங்கள்; நின் கொடி மிசை - உன் கொடியின் மேல்; பொருது வீழ்வன - சண்டையிட்டுக் கீழே விழுவனவாய்; புலம்புவ - கதறியழுது கொண்டு; நிலம்படப் புரள்வ - தரையில் விழுந்து புரளுகின்ற; கருது - (இதனை நீ) மனத்திற் கொள்வாய்; மேகங்கள் குமுறி, இரத்த மழை பொழிதலும், சூரியனைப் பரிவட்டம் சூழ்தலும், கொடி மேல் காக்கைக் கூட்டங்கள் சண்டையிட்டுப் புலம்பி நிலத்தில் புரளுதலும் ஆகிய தீ நிமித்தங்களைக் கரனுக்கு அகம்பன் சொன்னான் என்பது. ஊர் - பரிவட்டம் : சூரியனைச் சுற்றித் தோன்றும் வட்டம். 70 |