2945. | 'வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன; வயவர் தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன; தூங்கி, மீளி மொய்ம்புடை இவுளி வீழ்கின்றன; விரவி, ஞாளியோடு நின்று, உளைக்கின்ற நரிக் குலம் பலவால்; |
'வாளின் வாய்களை - வாள்களின் வெட்டு வாய்களை; ஈ வளைக்கின்றன - ஈக்கள் சுற்றுகின்றன; வயவர் தோளும் நாட்டமும் - படை வீரர்களின் தோள்களும் கண்களும்; இடம் துடிக்கின்றன - இடப் பக்கமாகத் துடிக்கின்றன; மீளி மொய்ம்புடை இவுளி - வலிய தோள்களையுடைய சேனைத் தலைவரின் குதிரைகள்; தூங்கி வீழ்கின்றன - (போர் செய்யும் நிலையில்) தூங்கிக் கீழே விழுகின்றன; ஞாளியோடு நரிக்குலம் பல - நாய்களோடு பல நரிக் கூட்டங்கள்; விரவி நின்று - சேர்ந்து வந்து நின்றவாறு; உளைக்கின்ற - ஊளையிடுகின்றன; ஆல் - ஈற்றசை. ஆயுதங்களின் வெட்டு வாய்களை ஈக்கள் சுற்றுவதும், வீரர்களின் தோள்களும் கண்களும் இடம் துடிப்பதும், குதிரைகள் தாமே தூங்கிவிடுவதும், நாய் நரிகள் ஊளையிடுவதும் தீ நிமித்தங்களாகும். உளைக்கின்ற - பலவின் பால் முற்று. 71 |