2946.'பிடி எலாம் மதம் பெய்திட, பெருங்
     கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு; உலகமும் கம்பிக்கும்;
     உயர் வான்
இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும்
     பெருந்திசை; எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு
     முழு முடை நாறும்

    'பிடி எலாம் - பெண் யானைகளெல்லாம்; மதம் பெய்திட -
மதநீரைச் சொரிய; பெருங்கவுள் வேழம் - பெரிய கதுப்புகளையுடைய
ஆண் யானைகளின்; மால் மருப்பு ஒடியும் - பெரிய தந்தங்கள் ஒடிந்து
விழுகின்றன; உலகமும் கம்பிக்கும் - பூமியும் அதிர்ச்சியடைந்து
நடுங்குகின்றது; உயர் வான் இடியும் - ஓங்கிய வானத்திலிருந்து இடிகளும்;
வீழ்ந்திடும் - மேலே விழும்; பெருந் திசை எரிந்திடும் - பெரிய
திக்குகள் தாமே தீப் பற்றி எரிகின்றன; எவர்க்கும் - (அரக்கர்)
எல்லோருக்கும்; முடியின் மாலைகள் - (தம்) தலையின் மேலே அணிந்த
பூமாலைகள்; புலாலொடு முழு முடை நாறும் - புலால் நாற்றத்தோடு்
மிக்க கெட்ட நாற்றமும் வீசுகின்றன; ஆல் - அசை.

     பெண் யானைக்கு இயற்கையில் மதம் இல்லை; ஆதலால் அவை
மதநீர் பொழிதல் தீ நிமித்தமாகும். பெண் யானைகள் மதநீரைச் சொரிவதும்,
ஆண்யானைகளின் தந்தங்கள் ஒடிவதும், உலகம் நடுங்குவதும் இடி
விழுவதும், திசைகள் தீப் பற்றி எரிவதும், மாலைகள் துர்நாற்றம் வீசுவதும்
தீ நிமித்தங்களாம்.

     ஒடியுமால் மருப்பு - 'ஆல்' அசையுமாகும்.                   72