2947.'இனைய ஆதலின், "மானிடன்
     ஒருவன்" என்று, இவனை
நினையலாவது ஒன்று அன்று அது;-
     -நீதியோய்!-நின்ற
வினை எலாம் செய்து வெல்லல் ஆம்
     தன்மையன் அல்லன்;
புனையும் வாகையாய்! பொறுத்தி, என் உரை'
     எனப் புகன்றான்.

    'இனைய ஆதலின் - இத்தகைய தீ நிமித்தங்கள் நிகழ்வனவாதலால்;
இவனை மானிடன் ஒருவன் என்று - இவனை ஒரு (எளிய)
மனிதனென்று; நினையல் ஆவது - துச்சமாக நினைப்பது; அது ஒன்று
அன்று -
பொருந்துவது ஆகாது; நீதியோய் - நீதியையுணர்ந்தவனே!;
நின்ற வினை எலாம் செய்து - (நீ) போருக்குரிய தொழில்கள்
எல்லாவற்றையும் செய்தாலும்; வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் -
வெல்லக் கூடிய (அவ்வளவு) எளிமையுடையவனாக (அவன்) இல்லை;
புனையும் வாகையாய் - வெற்றி மாலையுடையவனே; என் உரை
பொறுத்தி' -
(நான் கூறிய) என்னுடைய இந்த வார்த்தைகளைப் பொறுத்துக்
கொள்வாய்; எனப் புகன்றான் - என்று (அகம்பன்) சொன்னான்.

     இப்பொழுது நிகழ்ந்துள்ள தீநிமித்தங்களைப் பார்த்தால், நீ
அரக்கர்களை அணிவகுத்துப் பெரும் போர் செய்தாலும் வெல்ல
முடியாதவன் இராமனென்று தோன்றுகிறதென அகம்பன் கரனுக்கு
எச்சரிக்கை செய்தான் என்பது.                                  73