அறிவுரையைக் கரன் புறக்கணிக்க, படைகள் போர்மேல் செல்லுதல்

2948. உரைத்த வாசகம் கேட்டலும்,
     உலகு எலாம் உலையச்
சிரித்து, 'நன்று நம் சேவகம்!
     தேவரைத் தேய
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில்
     தோள், அமர் வேண்டி
இரைத்து வீங்குவ, மானிடற்கு
     எளியவோ?' என்றான்.'

     உரைத்த வாசகம் கேட்டலும் - (இவ்வாறு) அகம்பன் கூறிய
வார்த்தைகளைக் கேட்டவுடன்; உலகு எலாம் உலையச் சிரித்து - (கரன்)
உலகங்கள் யாவும் நிலை தளர்ந்து நடுங்குமாறு சிரித்து; தேவரைத் தேய
அரைத்த -
தேவர்களைத் தேய்த்து உருத்தெரியாமல் அரைத்த; அம்மி
ஆம் -
அம்மிக்கல் என்னும்; அலங்கு எழில் தோள் - அசைந்து
விளங்குகிற என் தோள்கள்; அமர் வேண்டி - போரினை விரும்பி;
இரைத்து வீங்குவ - பூரித்துப் பெருத்துள்ளன; மானிடற்கு எளியவோ -
(அத்தகைய தோள்கள்) ஒரு மனிதனுக்கு எளிமைப் படுவனவோ?; நம்
சேவகம் நன்று' -
நமது வீரம் நன்றாயிருந்தது; என்றான் - என்று
கூறினான்.

     தான் முன்னர்ப் புயவலிமையால் தேவர் பலரை அழித்தமை குறித்துத்
'தேவரைத் தேய அரைத்த அம்மியாம் தோள்' என்றது. தேவர்களை
எளிதில் அழித்த நாமோ இம் மனிதனுக்கு அஞ்சுவது? என்று அகம்பன்
கூறியதை ஏளனஞ் செய்து கூறியவாறு.

     நன்றிது : இது - அசைநிலை. இரைத்து வீங்கும் - ஒரு பொருட்
பன்மொழி தோளாகிய அம்மிக்கு வலிமையைக் குழவியாகவும், தேவர்களை
அரைக்கப்படு பொருளாகவும் கொள்ளுதல் வேண்டும்: ஏகதேசஉருவகம். 74