2949. | என்னும் மாத்திரத்து, எறி படை இடி என இடியா, மன்னர் மன்னவன் மதலையை, வளைந்தன-வனத்து மின்னும் வால் உளை மடங்கலை, முனிந்தன வேழம் துன்னினாலென, சுடு சினத்து அரக்கர்தம் தொகுதி. |
என்னும் மாத்திரத்து - என்று (கரன்) கூறிய அளவில்; வனத்து - காட்டிலே; மின்னும் வால் உளை மடங்கலை - ஒளி வீசும் தூய பிடரி மயிர்களையுடைய சிங்கத்தை; முனிந்தன வேழம் - கோபம் கொண்ட பல யானைகள்; துன்னினால் என - சூழ்ந்து நெருங்கினாற் போல; மன்னர் மன்னவன் மதலையை - தசரதச் சக்கரவர்த்தியின் குமாரனான இராமனை; சுடு சினத்து அரக்கர்தம் தொகுதி - கொதிக்கும் கோபத்தையுடைய அரக்கர்களின் கூட்டங்கள்; எறிபடை இடி என இடியா - தாக்குகின்ற படைக் கருவிகளை ஒன்றோடு ஒன்று வீசி இடி போன்ற முழக்கத்தைச் செய்து கொண்டு; வளைந்தன - சூழ்ந்தன. இராமன் ஒருவனால் அரக்கர் கூட்டம் எளிதில் அழிவது குறித்துச் சிங்கத்தை யானைகள் வளைத்தலாகிய இல்பொருள் உவமை கூறினார். அரக்கப் படை வீரர்க்கு யானைகளும், இராம பிரானுக்கு மடங்கலும் உவமைகள். 75 |