படை எலாம் இராம பாணத்தால் அழிதல் 2950. | வளைந்த காலையில், வளைந்தது, அவ் இராமன் கை வரி வில்; விளைந்த போரையும் ஆவதும் விளம்புதும்; விசையால், புளைந்த பாய் பரி புரண்டன; புகர் முகப் பூட்கை உளைந்த, மால் வரை உரும் இடி பட ஒடிந்தென்ன. |
வளைந்த காலையில் - (இவ்வாறு அரக்கர் படை இராமனைச்) சூழ்ந்து கொண்ட போது; அவ் இராமன் கை வரி வில் வளைந்தது - அந்த இராம பிரானின் கையிலுள்ள கட்டமைந்த வில்லும் (அம்பு தொடுக்க) வளைந்தது; விளைந்த போரையும் - (அப்பொழுது) நிகழ்ந்த போரினைக் குறித்தும்; ஆவதும் - அதனால் ஏற்பட்ட முடிவு பற்றியும்; விளம்புதும் - கூறுவோம்; விசையால் - (இராமபாணங்களின்) வேகத்தால்; பாய் பரி - பாய்ந்து செல்லும் குதிரைகள்; புளைந்த புரண்டன - துளைபட்டனவாய்க் கீழே விழுந்து புரண்டன; உரும் இடிபட - பேரிடி விழுவதால்; மால் வரை ஒடிந்து என்ன - பெரிய மலைகள் முறிபட்டாற் போல; புகர் முகப் பூட்கை - செம்புள்ளிகள் அமைந்த முகங்களையுடைய யானைகள்; உளைந்த - வருந்திக் கீழே விழுந்தன. அரக்கர் சேனை இராமனை வளைந்து கொள்ளவே. அந்த இராமனின் கை வில்லும் வளைந்தது. அவ் வில்லிலிருந்து அம்பெறிந்த வேகத்தால் குதிரைகள் புரள, இடியால் முறிந்த மலைகளைப் போல யானைகள் வருந்தின என்பது. புளைந்த - முற்றெச்சம். பூட்கை - புழைக்கை என்பதின் மரூஉ; யானையைக் குறிக்கும் சொல்; அன்மொழித்தொகை. இச்சொல்லால் யானையைக் கம்பர் பின்னும் குறிப்பர் (5588, 5601, 5608) ஆவதும் - கால வழுவமைதி. 76 |