2952.தொடி துணிந்தன தோளொடு;
     தோமரம் துணிந்த;
அடி துணிந்தன கட களிறு; அச்சொடு,
     நெடுந் தேர்,
கொடி துணிந்தன; குரகதம்
     துணிந்தன; குல மா
முடி துணிந்தன; துணிந்தன,
     முளையொடு முசலம்.

    தொடி துணிந்தன - தொடியென்னும் வீரவளைகள் துண்டு பட்டு
விழுந்தன; தோளொடு தோமரம் துணிந்த - கைகளோடு தோமரம்
என்னும் ஆயுதங்களும் துண்டாயின; கட களிறு அடி துணிந்தன - மத
யானைகளின் கால்கள் துண்டிக்கப்பட்டன; அச்சொடு நெடுந்தேர் -
பெரிய தேர்களின் அச்சுக்களோடு; கொடி துணிந்தன - கொடிகளும்
துண்டிக்கப் பெற்றன; குரகதம் துணிந்தன - குதிரைகள் துண்டங்களாக
வெட்டப்பட்டன; குல மா முடி துணிந்தன - கூட்டமாகிய (யாளி
முதலான) மிருகங்களின் தலைகள் துண்டிக்கப் பெற்றன; முசலம்
முளையொடு துணிந்தன -
உலக்கைகள் தண்டாயுதங்களோடு
துணிக்கப்பட்டன.

     அச்சு - இருசு; முளையொடு - அடியோடு என்றும்
பொருளுரைக்கலாம் தோமரம் - தண்டாயுதம் என்பர்; முளை முசலம்
என்பது ஒரு வகை ஆயுதமாகும்.                               78