2953.கருவி மாவொடு, கார் மதக்
     கைம்மலைக் கணத்து ஊடு-
உருவி மாதிரத்து ஓடின,
     சுடு சரம்; உதிரம்
அருவி மாலையின் தேங்கினது;
     அவனியில் அரக்கர்
திரு இல் மார்பகம் திறந்தன;
     துறந்தன சிரங்கள்.

    சுடு சரம் - (இராமபிரான்) ஏவிய கொடிய பாணங்கள்; கருவி
மாவொடு -
கல்லணை பூண்ட குதிரைகளையும்; கார் மதக் கைம் மலைக்
கணத்து -
கரிய நிறத்தையும், மதத்தையுமுடைய மலை போன்ற யானைக்
கூட்டங்களையும்; ஊடு உருவி மாதிரத்து ஓடின - ஊடுருவி அப்பாலே
சென்று திசைகள் எங்கும் விரைந்து சென்றன; உதிரம் அருவி மாலையின்
தேங்கினது -
இரத்தம் அருவிகளின் ஒழுங்குபோலத் தேங்கி நின்றது;
அவனியில் அரக்கர் - பூமியிலே அரக்கர்களின்; திரு இல் மார்பகம்
திறந்தன -
பொலிவற்ற மார்பிடங்கள் பிளவுபட்டன; சிரங்கள் துறந்தன -
தலைகள் துணிக்கப்பட்டு (உடலைவிட்டு) நீங்கின;

     அந்தப் போரில் இராமனின் கொடிய அம்புகள் குதிரைகளையும்,
யானைகளையும் ஊடுருவித் திசைகளெங்கும் ஓட, பூமியிலே அரக்கர்களின்,
மார்பகங்கள் பிளக்கப் படத் தலைகள் துண்டிக்கப்பட்டன; அப்போது
உதிரம் அருவியொழுங்கு போல அம்பு பட்ட மிருகங்களின் உடலிலிருந்து
பெருகியது என்பது கருவி : குதிரையின் மேலிருக்கை, தவிசு கல்லணை
(குதிரைச்சேணம்).

    மாவொடு, கணத்தொடு - உருபுமயக்கம். திருவின் மார்பகம் என
எடுத்து -வீரத்திருமகளையுடைய மார்பு என்றும், திரு வில் என எடுத்து -
மேலானஒளியையுடைய என்றும் உரைக்கலாம்; மேலும், திரு இல் மார்பகம்-
அரக்கர்களின் வெற்றித் திரு இல்லாத மார்பகம் எனலும் ஆம்.         79