2954. | ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், கோடி, என்று உணரா துன்று பத்திய, இராகவன் சுடு சரம் துரப்ப, சென்று, பத்திரத் தலையின மலை திரண்டென்ன, கொன்று, பத்தியில் குவித்தன பிணப் பெருங் குன்றம். |
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா - ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், இலக்கம், கோடி என்று கணக்கிட்டு அறிய முடியாதபடி; துன்று பத்திய - நெருங்கின வரிசையாகவுள்ள; சுடு சரம் - நெருப்புப் போன்ற கொடிய அம்புகளை; இராகவன் துரப்ப - இரகு குலத்தில் தோன்றிய இராமன் செலுத்த; சென்று - (அந்த அம்புகள்) பகைவர் மேல் சென்று; கொன்று - அவ்வரக்கர்களைக் கொன்று; பத்திரத் தலையின மலை - அம்புகளைத் தலையிற் கொண்ட பல மலைகள்; திரண்டு என்ன- திரண்டு கிடந்தன போல; பிணப் பெருங் குன்றம் - பெரிய பிணக் குவியல்களை; பத்தியில் குவித்தன - வரிசையாகக் குவிந்து கிடக்கச் செய்தன. அம்புகள் பொத்திய பிணக் குன்றுகளுக்கு அம்புகள் பாய்ந்துள்ள மலைகள் உவமையாம். பத்திரம் - அம்பு. நூறாயிரம் - இரட்டுற மொழிதல், நூறும் ஆயிரமும்; நூறாயிரம் (இலட்சம்) எனக் கொள்க. பத்திரத் தலையின் - மலைகளின் சிகரங்களை ஒத்தனவாக என்னலுமாம். 80 |