2056. | கைகள் வாளொடு களம் பட, கழுத்து அற, கவச மெய்கள் போழ்பட, தாள் விழ, வெருவிட, நிருதர் செய்ய மாத் தலை சிந்திட, திசை உறச் சென்ற- தையலார் நெடு விழி எனக் கொடியன சரங்கள் |
தையலார் நெடு விழிஎன - மகளிரின் நீண்ட கண்களைப் போல; கொடியன சரங்கள்- கொடுமையான இராமபாணங்கள்; நிருதர் வெருவிட- அரக்கர் அஞ்சிடுமாறு; கைகள் வாளொடு - அவர்களின் கைகள் பிடித்திருந்த வாள்களோடு; களம்பட - போர்க் களத்தில் அறுபட்டு விழ; கழுத்து அற - கழுத்துக்கள் அறுபட; கவச மெய்கள் போழ்பட - கவசமணிந்த உடல்கள் பிளவுபட; தாள் விழ - கால்கள் அற்றுவிட; செய்ய மாத்தலை சிந்திட - (அவர்களுடைய) சிவந்த பெரிய தலைகள் சிதறிவிழ; திசை உறச் சென்ற - (செய்து) திக்குகளின் எல்லையை அளாவ அப்பாற் சென்றன. இராம பாணங்களுக்குத் தையலார் விழி உவமானமாயிற்று : உவமானத்தை உவமேயமாகக் கூறியதால்; எதிர்நிலையணி மகளிரின் கண்களைப் போன்று கூரியனவும், பெருந் துயரை விளைப்பனவுமான இராம சரங்கள், அரக்கரின் வாளேந்திய கைகளும் கால்களும் அற்று விழவும், கவசமணிந்த உடல்கள் பிளவுபடவும், கழுத்துக்கள் அறுபடவும், தலைகள் சிதறவும் செய்து திசையுறச் சென்றன என்றவாறு. 82 |