2958. | அலை மிதந்தன குருதியின் பெருங் கடல், அரக்கர் தலை மிதந்தன; நெடுந் தடி மிதந்தன; தடக் கைம்- மலை மிதந்தன; வாம் பரி மிதந்தன; வயப் போர்ச் சிலை மிதந்தன; மிதந்தன, கொடி நெடுந் தேர்கள். |
(அப்பொழுது) அலை மிதந்தன - அலைகள் பொங்கி மேலெழுந்தனவாயின; குருதியின் பெருங்கடல் - அந்தப் பெரிய இரத்தக் கடலில்; அரக்கர் தலை மிதந்தன - அரக்கர்களின் தலைகள் மிதந்தன; நெடுந்தடி மிதந்தன - பெரிய தசைத் துண்டுகள் மிதந்தன, தடக்கைம் மலை மிதந்தன - பெரிய துதிக்கைகளையுடைய யானைகள் மிதந்தன; வாம் பரி மிதந்தன - தாவிச் செல்லும் குதிரைகள் மிதந்தன; வயப் போர்ச் சிலை மிதந்தன - வலிய போருக்குரிய விற்கள் மிதந்தன; கொடி நெடுந் தேர்கள் மிதந்தன - கொடிகளோடு நீண்ட தேர்கள் மிதந்தன. அந்தப் போரில் இராமனின் கூரிய அம்புகள் உண்டாக்கிய இரத்தக் கடலில் அரக்கர் தலைகள் முதலாயின மிதந்தன என்பது. தும்பிக்கையுடைய யானையைக் கைம்மலை என்றார். மிதந்தன : சொற்பின்வருநிலையணி. 84 |