2962. | மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர், கருடன் அஞ்சுறு, கண் மணி காகமும் கவர்ந்த; இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ? அருள் தரும் திறத்து அறன் அன்றி, வலியது உண்டாமோ? |
மருள் தரும் - மாயையைச் செய்கின்ற; களி வஞ்சனை - களிப்பும் வஞ்சனையுமுள்ள; வளை எயிற்று அரக்கர் - வளைந்த கோரமான பற்களையுடைய இராக்கதர்களின்; கருடன் அஞ்சுறு கண்மணி - கருடனும் காண அஞ்சும்படியான கண்களின் கருவிழிகளை; காகமும் கவர்ந்த - (இப்பொழுது) காக்கைகளும் பறித்தெடுத்தன; இருள் தரும் புரத்து இழுதையர் - இருளைப் போன்ற மிகக் கரிய உடம்பையுடைய வஞ்சகர்களிடம்; பழுது உரைக்கு - கேடு சொல்வதற்கு; எளிதோ - எளியது ஆகுமோ; அருள் தரும் திறத்து - கருணை செய்யும் தன்மையையுடைய; அறன் அன்றி - தருமமேயல்லாமல்; வலியது - வலிமையுடையது; உண்டாமோ - (உலகத்தில் வேறு) உள்ளதாகுமோ? உயிர்களுக்குத் தருமத்தினும் மிக்க நன்மை தருவதும், அதருமத்தினும் மிக்க கேடு தருவதும் வேறு இல்லையாதலால் கொடியவரான அரக்கர் எளிதாக அழிவடைந்தனர் என்பது. 'அருள் தரும் திறத்து அறனன்றி வலியது உண்டாமோ' - இராமபிரானே வெற்றி பெற்றமையைத் தெரிவிப்பது : பிறிது மொழிதலணி. 'இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ' - வேற்றுப் பொருள் வைப்பணி. காகமும் - உம் : இழிவு சிறப்பும்மை. அறத்துக்கு அருள் மிக இன்றியமையாததால் 'அருள் தரும் திறத்து அறன்' எனப்பட்டது. 88 |