கலிவிருத்தம்

2963. பல் ஆயிரம்இருள் கீறிய
     பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா, வெயில்
     அயில் ஆம் என விழியா,-
கல் ஆர் மழை, கண மா முகில்
     கடைநாள், விழுவனபோல்,-
எல்லாம் ஒரு தொடையா உடன்
     எய்தார்; வினை செய்தார்.

    (இவ்வாறு அரக்கரையழித்து) பல் ஆயிரம் இருள் - மிகப்
பலவாகிய இருளின் தொகுதியை; கீறிய பகலோன் என ஒளிரும் -
பிளந்து அழித்த சூரியனைப் போல ஒளி வீசுகின்ற; வில்லாளனை -
வில்லில் வல்லவனான இராமபிரானை; (மற்றும் பல அரக்கர்); முனியா -
கோபித்து; வெயில் அயில் ஆம் என விழியா - ஒளியையுடைய
வேலைப் போலக் கூர்மையாகக் கண் விழித்துப் பார்த்து; கண மா முகில்-
கூட்டமாகிய பெரிய மேகங்கள்; கடை நாள் - யுக முடிவுக் காலத்தில்;
கல் ஆர் மழை - கற்களைப் போன்ற மழை; விழுவன போல் -
சொரிவது போலத் தோன்றுமாறு; எல்லாம் ஒரு தொடையா - எல்லா
வகை அம்புகளையும் ஒரே தொடர்ச்சியாக; உடன் எய்தார் - சேர்த்து
எய்து; வினை செய்தார் - போர்த் தொழிலைச் செய்தார்கள்.

     பல்லாயிரம் இருள் போரில் இறந்துபட்ட பல்லாயிரம்
அரக்கர்களுக்கும், பகலவன் இராமனுக்கும் கல் மழை அம்பு
பொழிதலுக்கும் மேகக் கூட்டம் அரக்கர் கூட்டத்துக்கும் உவமை. முனியா,
விழியா செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள்.             89