2964. எறிந்தார் என, எய்தார் என,
     நினைந்தார் என, எறிய
அறிந்தார் என, அறியாவகை, அயில்
     வாளியின் அறுத்தான்;
செறிந்தாரையும், பிரிந்தாரையும்,
     செறுத்தாரையும், சினத்தால்
மறிந்தாரையும், வலித்தாரையும், மடித்தான்-
     சிலை பிடித்தான்.

    சிலை பிடித்தான் - வில்லைக் கையில் ஏந்தியவனான இராம பிரான்;
செறிந்தாரையும் - கூட்டமாகத் திரண்டு வந்த அரக்கர்களையும்;
பிரிந்தாரையும் - தனித் தனியே எதிர்த்து வந்த அரக்கர்களையும்;
செறுத்தாரையும் - மிகக் கோபித்துப் பகைத்த அரக்கர்களையும்;
சினத்தால் மறிந்தாரையும் - (தோற்றோடிப் பின்பு) கோபத்தால் திரும்பி
வந்த அரக்கர்களையும்; வலித்தாரையும் - வலிந்து போர் செய்ய
வந்தவர்களையும் (ஆகிய அனைவரையும்); எறிந்தார் என - இன்னவர்
வேல் முதலிய எறிபடைகளை வீசினவர்களென்றும்; எய்தார் என -
இன்னார் பாணங்களைப் பிரயோகித்தவரென்றும்; நினைந்தார் என -
(இன்னார் ஆயுதங்களைப் பயன்படுத்தக்) கருதினவரென்றும்; எறிய
அறிந்தார் என -
(இன்னார் ஆயுதங்களை) வீச ஆராய்ந்து
துணிந்தவரென்றும்; அறியாவகை - அறியாதபடி; அயில் வாளியின்
அறுத்தான் -
கூர்மையான (தன்னுடைய) அம்புகளால் துணித்து;
மடித்தான் - கொன்றொழித்தான்.

     சிலை பிடித்தவன் அறுத்தான் மடித்தான் என்று வினை முடிவு செய்க.
இன்ன அரக்கர் இன்ன விதமாக இன்னது செய்தாரென்று அறிய
முடியாதபடி அவர்களையெல்லாம் மிக விரைவில் இராமபிரான் துணித்தான்
என்பது. செறிந்தார் - தன்னைச் சூழ்ந்து நெருங்கி நின்றவரும், பிரிந்தார் -
விலகித் தூரத்தில் நின்றவரும் எனவும் உரைக்கலாம்.                90