2967.பொலந் தாரினர், அனலின் சிகை
     பொழி கண்ணினர், எவரும்
வலம் தாங்கிய வடி வெம் படை
     விடுவார், சர மழையால்
உலந்தார்; உடல் கடலோடு உற,
     உலவா உடல் உற்றார்;
'அலந்தார் நிசிசரர் ஆம்' என,
     இமையோர் எடுத்து ஆர்த்தார்.

    பொலம் தாரினர் - அழகிய மாலையணிந்தவர்களும்; அனலின்
சிகை பொழி கண்ணினர் -
நெருப்பின் சுடர்களைச் சிந்துகின்ற
கண்களையுடையவர்களும்; வலம் தாங்கிய - வலிமை கொண்ட; வடி
வெம் படை விடுவார் எவரும் -
கூரிய கொடிய போர்க் கருவிகளை
இராமன் மேல் விடுபவர்களான அரக்கர்கள் யாவரும்; சர மழையால்
உலந்தார் -
(இராமன் எய்த) அம்பு மழையால் இறந்தனர்; உடல்
கடலோடு உற -
அவ்வாறு இறந்தோர் தம் உடல்கள் கடலோடு போய்ச்
சேர; உலவா உடல் உற்றார் - (பின்) அழியாத தேவ உடலைப்
பெற்றார்கள்; இமையோர் - (அதனால்) தேவர்கள்; நிசிசரர் அலந்தார்
ஆம் என ஆர்த்தார் -
அரக்கர்கள் அழிந்தார்களென்று மகிழ்ச்சியால்
ஆரவாரம் செய்தார்கள்.

     நிசிசரர் - அரக்கர் : இரவில் சஞ்சரிப்பவர்.                  93