2968. ஈரல் செறி கமலத்தன, இரதத்
     திரள் புளினம்,
வீரக் கரி முதலைக் குலம்,
     மிதக்கின்றன உதிக்கும்
பாரக் குடர் மிடை பாசடை
     படர்கின்றன பலவா,
மூரித் திரை உதிரக் குளம் முழுகிக்
     கழுது எழுமே.

    ஈரல் செறி கமலத்தன- (இறந்த அரக்கர்களின்) ஈரல்களாகிய நிறைந்த
தாமரை மலர்களையுடையவையும்; இரதம் திரள் புளினம் - தேர்களாகிய
திரண்ட மணற்குன்றுகளையுடையவை; வீரக் கரி - வலிய யானைகளாகிய;
முதலைக் குலம் - முதலைகளின் கூட்டம்; மிதக்கின்றன - மிதக்கப்
பெற்றவையும்; பாரம் குடர் - கனத்த குடல்களாகிய; மிடை பாசடை -
நெருங்கிய பசுமையான தாமரையிலைகள்; படர்கின்றன - மேலே படரப்
பெற்றவையுமாகிய; மூரித் திரை உதிரம் குளம் பல - பெரிய
அலைகளையுடைய இரத்தக் குளங்கள் பல; கழுது முழுகி எழ - பேய்கள்
முழுகி நீராடி எழுமாறு; உதிக்கும் - உண்டாயின.

     பெரிய இரத்த வெள்ளத்தைப் பேய்கள் நீராடியெழுவதற்கு இடமான
தாமரைப் பொய்கைகளென்று உருவகப்படுத்தி, அவற்றிற்குக் குடல்களைத்
தாமரையிலைகளாகவும், ஈரல்களைத் தாமரை மலர்களாகவும் தேர்களை
மணற் குன்றுகளாகவும், யானைகளை முதலைகளாகவும் குறித்து
வருணித்தார். முற்றுவமையணி.                                  94