2969. | அழைத்தார் சிலர், அயர்த்தார் சிலர், அழிந்தார் சிலர், கழிந்தார்; உழைத்தார் சிலர், உயிர்த்தார் சிலர், உருண்டார் சிலர், புரண்டார்; குழைத் தாழ் திரைக் குருதிக் கடல் குளித்தார் சிலர், கொலை வாய் மழைத் தாரைகள் படப் பாரிடை மடிந்தார் சிலர், உடைந்தார். |
கொலை வாய் மழைத் தாரைகள் பட - (பகைவரைக்) கொல்லும் தன்மையுடைய கூரிய நுனியுள்ள (இராமனுடைய) அம்புகளாகிய மழைத் தாரைகள் மேல் விழுவதனால்; சிலர் அழைத்தார் - (அரக்கர்களில்) சில பேர் (துன்பம் பொறுக்க மாட்டாமல் ஐயா அப்பா என்று) கூவியழைத்தார்கள்; சிலர் அயர்த்தார் - சிலர் சோர்ந்து தளர்ந்தார்கள்; சிலர் அழிந்தார் - சிலர் இறந்தொழிந்தார்கள்; (சிலர்) கழிந்தார் -சிலர் நெடுந்தொலைவு விலகிச் சென்றார்கள்; சிலர் உழைத்தார் - சிலர் மிக வருந்தினார்கள்; சிலர் உயிர்த்தார் - சிலர் பெருமூச்சு விட்டனர்; சிலர் உருண்டார் - சிலர் (தரையிலே) உருண்டார்கள்; (சிலர்) புரண்டார் - சிலர் (தரையிலே) புரண்டு தத்தளித்தனர்; சிலர் குழை தாழ் - சிலர் சேறு ஆழ்ந்து; திரைக் குருதிக் கடல் குளித்தார் - அலைகளோடு கூடிய இரத்தக் கடலில் மூழ்கினார்கள்; சிலர் பார் இடை மடிந்தார் - சிலர் தரையிலே விழுந்து இறந்தார்கள்; (சிலர்) உடைந்தார் - சிலர் உறுதிநிலை கெட்டு ஓடினார்கள். அரக்க வீரர் பலரும் இராமனுடைய அம்புகளால் பலபடி, ஆயினமையை இச் செய்யுள் புலப்படுத்தும். 'கொலைவாய்' என்ற அடைமொழியால் 'மழை' அம்புமழையாயிற்று. முன் செய்யுளில் குருதிக் குளமாகவிருந்தது இச் செய்யுளில் குருதிக் கடலாகப் பொங்கியது என்பது. 95 |