2974. | மால் பொத்தின மறவோர் உடல் மழை பொத்தின; வழி செம்- பால் பொத்தின, நதியின் கிளர் படி பொத்தின; படர் வான்- மேல் பொத்தின குழு விண்ணவர் விழி பொத்தினர்; விரை வெங் கால் பொத்தினர் நமன் தூதுவர், கடிது உற்று, உயிர் கவர்வார். |
மால் பொத்தின - மயக்கம் நிறைந்த; மறவோர் உடல் - கொடிய அரக்கர்களின் உடம்பில்; மழை பொத்தின - அம்பு மழை துளைத்தன; வழி செம்பால் பொத்தின - வழிகின்ற இரத்தப் பெருக்கு நிறைந்ததுவாய்; நதியின் கிளர்படி பொத்தின - ஆறுகள் போல விளங்கும் பூமியை மறைத்தது; படர் வான் மேல் பொத்தின - பரந்த வானத்தின் மேல் நிறைந்த; குழு விண்ணவர் - கூட்டமாகவுள்ள தேவர்கள்; விழி பொத்தினர் - (போரின் உக்கிரத்தைக் காண விரும்பாமல்) கண்களை மூடிக் கொண்டார்கள்; நமன் தூதுவர் - யமதூதர்கள்; விரை வெங்கால் பொத்தினர் - விரைவாக வீசும் கொடிய காற்றையொத்தவர்களாய்; கடிது உற்று - விரைவாக வந்து; உயிர் கவர்வார் - அரக்கருயிரைப் பறிப்பவர்களாயினர். வீரர்களை மலைகளுக்கு உவமித்ததற்கேற்ப, அவர்களின் உடல்களிலிருந்து பெருகியோடும் இரத்த வெள்ளத்தை நதிகளாகக் கூறினார். நமன் தூதுவர் தூது பொருந்தியது - அவர்களின் மிகுதியையும், அவர்களின் கால்களால் அந்தப் போர்க்களம் மூடுண்டதையும் அரக்கர்களின் அழிவு மிகுதியையும் அறிவிப்பது. பொத்துதல் - நிறைதல், மறைதல், மூடுதல் மழை - மழை போல் சொரிந்த அம்புத் தொகுதி : உவமையாகுபெயர். செம்பால் - இரத்தம். 'விரை வெங்கால் பொத்தினர் கடிதுற்று' - 'விரைந்து செல்லும் தன்மையுள்ள கொடிய தம் கால்களை அடித்துக் கொண்டு விரைந்து வந்து' எனப் பொருள் உரைப்பினும் அமையும். 100 |