2978. | சுற்றுற நோக்கினர், தொடர்ந்த சேனையில் 'அற்றில தலை' எனும், ஆக்கை கண்டிலர்; தெற்றினர் எயிறுகள்; திருகினார் சினம்; முற்றினர் இராமனை, முடுகு தேரினார். |
(படைத் தலைவர் பதினால்வரும்) சுற்றுற நோக்கினர் - (தம்மைச்) சுற்றிலும் எல்லாப் பக்கங்களிலும் பார்த்து; தொடர்ந்த சேனையில் - தம்மைத் தொடந்து வந்த சேனைகளில்; தலை அற்றில எனும் ஆக்கை - தலை அறாதவையென்று சொல்லக் கூடிய அரக்கரின் உடம்புகளை; கண்டிலர் - (ஒன்றேனும்) காணாதவராகி; எயிறுகள் தெற்றினர் - பற்களைக் கடித்துக் கொண்டனர்; சினம் திருகினார் - கோபம் மூண்டு; முடுகு தேரினார் - விரைந்து செல்லும் தேர்களையுடையவர்களாய்; இராமனை முற்றினர் - இராமபிரானைச் சூழ்ந்து கொண்டனர். சேனையிலிருந்த குதிரைகள், யானைகள் உட்பட யாவும் தலையறு பட்டமை விளங்கும். சினம் திருகுதல் - கோபத்தால் முறுக்கேறுதல். பற்களைக் கடித்தல் கோபத்தால் உண்டாகும் மெய்ப்பாடுகளுள் ஒன்று. 104 |