2979. ஏழ்-இரு தேரும் வந்து,
     இமைப்பின் முன்பு, இடை
சூழ்வன, கணைகளின்
     துணிய நூறினான்;
ஆழியும், புரவியும், ஆளும்
     அற்று, அவை
ஊழி வெங் கால் எறி
     ஓங்கல் ஒத்தவே.

    வந்து இடை சூழ்வன - வந்து பக்கத்திலே சூழ்ந்தவையான; ஏழ்
இரு தேரும் -
பதினான்கு தேர்களையும்; இமைப்பின் முன்பு -
கண்ணிமைக்கும் நேரத்தில்; கணைகளின் - அம்புகளால்; துணிய
நூறினான் -
துண்டாகும்படி (இராமன்) அழித்தான் (அப்பொழுது);
ஆழியும் புரவியும் - தேர்ச் சக்கரங்களும் குதிரைகளும்; ஆளும் அற்று
-
தேர்ச் சாரதிகளும் ஒழிந்து; அவை ஊழி வெம்கால் - அவை கொடிய
ஊழிக் காற்றால்; எறி ஓங்கல் ஒத்த - எடுத்தெறியப்படுகின்ற மலைகளைப்
போன்றன; ஏ - ஈற்றசை.

     ஊழிக் காற்று - இராமனுடைய அம்புக்கும், மலைகள் - வலிய பெரிய
சக்கரம் பூண்ட தேர் முதலியவற்றுக்கும் உவமை.                   105