2981. | நூறி சரம் எலாம் நுறுங்க வாளியால் ஈறுசெய்து, அவர் சிலை ஏழொடு ஏழையும் ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால், கூறுசெய்து, அமர்த் தொழிற் கொதிப்பை நீக்கினான். |
நூறிய சரம் எலாம் - அழிக்கும் இயல்புடைய (அந்த அரக்கர்களின்) அம்புகளையெல்லாம்; நுறுங்க - பொடியாகும்படி; வாளியால் - (இராமன் தன்) பாணங்களால்; ஈறு செய்து - அழித்து; அவர் சிலை ஏழொடு ஏழையும் - அவர்களின் விற்கள் பதினான்கையும்; ஆறினொடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் - பதினான்கு அம்புகளால்; கூறு செய்து - துண்டுகளாக்கி; அமர்த் தொழிற் கொதிப்பை நீக்கினான் - போர்ச் செயலில் அவர்களின் உக்கிரத்தைப் போக்கினான். இராமன் பதினான்கு அரக்கர் தொடுத்து விடுத்த அம்புகளையெல்லாம் தன் அம்புகளால் அழித்துப் பதினான்கு அம்புகளால் அந்த வீரர்களின் விற்களைத் துண்டிக்கவே அன்னாரின் போரின் உக்கிரம் (வேகம்) குறைந்தது என்பது. 107 |