2982.வில் இழந்து, அனைவரும்
     வெகுளி மீக்கொள,
கல் உயர் நெடு வரை
     கடிதின் ஏந்தினார்,
ஒல்லையில் உருத்து, உயர்
     விசும்பில் ஓங்கி நின்று,
எல் உயர் பொறி உக,
     எறிதல் மேயினார்.

    அனைவரும் - அந்தப் படைத் தலைவர் எல்லோரும்; வில் இழந்து-
(தம்) விற்களையிழந்ததனால்; வெகுளி மீக்கொள - கோபம் மேலிட; கல்
உயர் நெடுவரை -
கல்லால் உயர்ந்த பெரிய மலைகளை; கடிதின்
ஏந்தினார் -
விரைவில் (கையிலே) எடுத்துக் கொண்டு; ஒல்லையில்
உருத்து -
விரைவாக எழுந்து சீறி; உயர் விசும்பில் ஓங்கி நின்று -
ஓங்கிய ஆகாயத்தில் உயர நின்று கொண்டு; எல் உயர் பொறி உக -
கதிரவன் ஒளி போன்ற அளவில்லாத தீப் பொறிகள் சிந்த; எறிதல்
மேயினார் -
(அந்த மலைகளை) இராமன் மேல் வீசியெறிந்தார்கள்.

     தம்முடைய விற்கள் துண்டிக்கப்படவே அந்த அரக்க வீரர்
மலைகளையேந்தி வானத்தில் ஓங்கி நின்று எறியத் தொடங்கினர் என்பது. 108