படைத் தலைவர்கள் மாய, திரிசிரா போர்மேல் வருதல் 2984. | படைத் தலைத் தலைவர்கள் படலும், பல் படை புடைத்து, அடர்ந்து, எதிர் அழல் புரையும் கண்ணினார். கிடைத்தனர், அரக்கர்கள்; கீழும் மேலும் மொய்த்து அடைத்தனர் திசைகளை; அமரர் அஞ்சினார். |
படைத் தலைத் தலைவர்கள் படலும் - சேனையிடத்து முதன்மை பெற்ற தலைவர்கள் பதினான்கு பேரும் இவ்வாறு இறந்த அளவிலே; அரக்கர்கள் - மற்றுமுள்ள இராக்கதர்கள்; பல் படை புடைத்து - தம்முடைய பல வகை ஆயுதங்களையும் வீசிக் கொண்டு; அடர்ந்து - நெருங்கி; அழல் புரையும் கண்ணினார் - நெருப்பைப் போன்ற கண்களையுடையவர்களாய்; எதிர் கிடைத்தனர் - இராமன் எதிரில் நெருங்கி; கீழும் மேலும் மொய்த்து - நிலத்திலும் ஆகாயத்திலுமாக மொய்த்துக் கொண்டு; திசைகளை அடைத்தனர் - திக்குகளை மறைத்தார்கள் (அதனைக் கண்டு); அமரர் அஞ்சினார் - தேவர்கள் அச்சங் கொண்டார்கள். பதினான்கு படைத் தலைவரும் இறந்திடவே வேறு அரக்கர்கள் சினத்தோடு ஆயுதங்களை வீசிக் கொண்டு எல்லாப் பக்கங்களிலும் திரண்டு நெருங்கவே, தேவர்கள் அஞ்சினர் என்பது - படைத்தலை - 'தலை' ஏழனுருபு. படைத் தலைவர்களோடு வந்த வீரர்கள் யாவரும் அழிந்தனர். என்று முன் (3978) கூறினமையால் இங்கு வந்தவர் வேறு என்பதாயிற்று. 110 |