அறுசீர் ஆசிரிய விருத்தம்

2986.வெம் படை, நிருதர், வீச விண்ணிடை
     மிடைந்த;
வீரன்
அம்பு இடை அறுக்க, சிந்தி அற்றன
     படும்' என்று, அஞ்சி,
உம்பரும் இரியல்போனார்
;உலகு
     எலாம் உலைந்து சாய்ந்த;
கம்பம் இல் திசையில் நின்ற களிறும்,
     கண் இமைத்த அன்றே.

     நிருதர் வீச - அரக்கர்கள் வீசியெறிவதால்; வெம்படை - கொடிய
அப் படைக் கருவிகள்; விண்ணிடை மிடைந்த - வானத்தில் நெருங்கின;
வீரன் அம்பு இடை அறுக்க - இராமபிரானின் அம்புகள் இடையே
புகுந்து அறுத்ததால்; அற்றன - துணிபட்டனவாய்; சிந்திப் படும் - சிதறி
(நம்மேல் ஊறு ஏற்பட) விழக்கூடும்; என்று - என்று எண்ணி; அஞ்சி -
அஞ்சினவர்களாய்; உம்பரும் இரியல் போனார் - தேவர்களும் ஓடிப்
போனார்கள்; உலகு எலாம் - மற்ற உலகங்கள் எல்லாம்; உலைந்து
சாய்ந்த -
நிலைகெட்டு நடுங்கித் தளர்ந்தன; கம்பம் இல் - நிலைபெயராத;
திசையில் நின்ற களிறும் - திசைகளைச் சுமந்து நின்ற திக்கு
யானைகளும்; கண் இமைத்த - (அச்சத்தால்) கண்களை மூடிக் கொண்டன.

     அன்று ஏ - அசைகள். அரக்கர் எறிந்த படைக்கலன்களை
இராமபிரானின் அம்பு இடையே அறுத்ததால் அறுபட்ட அந்த ஆயுதங்கள்
நம்மேல் படக்கூடுமென்று அஞ்சித் தேவர்களும் நிலைகெட்டோட,
உலகமெல்லாம் நடுங்கித் தளர, திக்கு யானைகளும் அச்சத்தால்
கண்ணிமைத்தன என்பது. தொடர்புயர்வு நவிற்சியணி.               112