கலி விருத்தம் 2987. | அத் தலைத் தானையன், அளவு இல் ஆற்றலன், முத் தலைக் குரிசில், பொன் முடியன்; முக்கணான் கைத்தலைச் சூலமே அனைய காட்சியான்; வைத தலைப் பகழியால் மழை செய் வில்லினான். |
அத் தலைத் தானையன்- சிறந்த அந்தச் சேனையையுடைய தலைவன் (யாரென்றால்); அளவு இல் ஆற்றலன் - அளவற்ற வலிமையுடையவனும்; பொன் முடியன் - பொன்னாலாகிய கிரீடத்தையுடையவனும்; வைத்தலைப் பகழியால் - கூரிய நுனிகொண்ட அம்புகளால்; மழை செய் வில்லினான்- மழை பொழிகின்ற வில்லையுடையவனும்; முக்கணான் கைத்தலை - மூன்று கண்களையுடையவனான சிவபிரானின் கையிலுள்ள; சூலமே அனைய காட்சியான் - சூலம் போன்ற தோற்றத்தையுடையவனுமாகிய; முத் தலைக் குரிசில் - மூன்று தலைகளையுடைய திரிசிரா என்னும் வீரனாவான். திரிசிரா என்னும் படைத் தலைவனின் தன்மையை இப் பாடல் கூறுகிறது. மூன்று தலைகளைக் கொண்டமைக்கும். அழித்தல் தொழில் செய்யுங் கொடுமைக்கும் சிவபெருமானின் சூலம் உவமையாயிற்று. 113 |