2988. | அன்னவன் நடுவுற, 'ஊழி ஆழி ஈது' என்ன, வந்து, எங்கணும் இரைத்த சேனையுள், தன் நிகர் வீரனும், தமியன், வில்லினன், துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான். |
அன்னவன் நடுவுற - அத்தகைய திரிசிரன் என்பவன் நடுவிலே பொருந்தியிருக்க; 'ஊழி ஆழி ஈது' என்ன - ஊழிக் காலத்துப் பெருங்கடல் இதுவென்று சொல்லும்படி; எங்கணும் வந்து - எல்லாப் பக்கங்களிலும் வந்து; இரைத்த சேனையுள் - ஆரவாரித்த அரக்கர் சேனையிலே; தன் நிகர் வீரனும் - (வேறு உவமையில்லாது) தன்னைத் தானேயொத்த வீரனான இராமனும்; தமியன் வில்லினன் - தனியே வில்லையேந்தியவனாய்; துன் இருள் இடையது - அடர்ந்த இருளின் நடுவேயுள்ள; ஓர் விளக்கின் - ஒரு விளக்குப் போல; தோன்றினான் - விளங்கினான். திரிசிரா நடுவிலே பொருந்திய அரக்கச் சேனைகள் தன்னைச் சூழ்ந்து நிற்க அவர்களுக்கு நடுவே இராமபிரான் இருளிடையே தோன்றும் விளக்குப் போல விளங்கினான் என்பது. 114 |