2992.'அற்றன சிரம்' என
     அறிதல் தேற்றலர்,
கொற்ற வெஞ் சிலை சரம்
     கோத்து வாங்குவார்
இற்றவர்; இறாதவர்
     எழுந்து, விண்ணினைப்
பற்றின மழை எனப்
     படை வழங்குவார்.

    இற்றவர் - தலையறுபட்ட அரக்கர்கள்; சிரம் அற்றன என - (தம்)
தலைகள் அறுபட்டனவென்று; அறிதல் தேற்றலர் - அறியாதவர்களாய்;
கொற்ற வெம் சிலை சரம் கோத்து வாங்குவார் - வெற்றி தரும் கொடிய
வில்லிலிருந்து அம்புகளைப் பூட்டியெய்வார்கள்; இறாதவர் -
தலையறுபடாதவர்கள்; எழுந்து - எழுந்து; விண்ணினைப் பற்றின மழை
என -
ஆகாயத்தைக் கவிந்த மழை போல; படை வழங்குவார் - போர்க்
கருவிகளை வீசுவார்கள்.

     தலை அற்றமை தெரியாத பேராவேசம் விளங்குகிறது. இச் செய்யுளில்
தலையறுபட்டவர். தலையறுபடாதவர் ஆகிய இரு வகை யரக்கர்களின்
போர்ச் செயல்கள் குறிக்கப் பெறுகின்றன.

     ஒப்பு : 'அடுசிலைப் பகழி தொடுத்து விடப் புகுமளவினில் அயலெதிர்
விட்டவர் வெட்டின உடல் சில இரு துணிபட்டன பட்ட பின் ஒரு துணி
கருதும் இலக்கை யழிக்குமே' (க. பரணி 421)                      118