2994. | கவரி வெண் குடை எனும் நுரைய; கைம்மலைச் சுவரன; கவந்தம் ஆழ் சுழிய; தண் துறை பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய; உவரியைப் புதுக்கின- உதிர-ஆறுஅரோ. |
உதிர ஆறு - (போர்க் களத்தில் பெருகியோடிய) இரத்த ஆறுகள்; கவரி வெண்குடை - வெண் சாமரங்களும் வெண் குடைகளும்; எனும் நுரைய - என்கின்ற நுரைகளைக் கொண்டன; கைம் மலைச் சுவரன - இறந்த யானைகளாகிய பக்கச் சுவர்களையுடையனவாயின; கவந்தம் ஆழ் சுழிய - குறையுடல்கள் ஆழத்தக்க சுழிகளையுடையன; தண் துறை - குளிர்ந்த நீர்த் துறைகளிலே; பவர் இனப் படு மணி குவிக்கும் - நெருங்கிய பலவகைப்பட்ட இரத்தினங்களைக் கொண்டு வந்து குவிக்கின்ற; பண்ணைய - சேணங்களாகிய படகுகளையுடையவையான; உவரியைப் புதுக்கின - கடலைப் புதிய தாக்கின. போரில் அறுபட்ட படைகளின் உதிரப் பெருக்கின் வருணனை கூறியது இது. 'உவரியைப் புதுக்கின' என்பதன் விளக்கம் வருமாறு : ஆற்றின் புது வெள்ளம் வேகமாகச் சென்று கடலிலே விழுந்து நெடுந்தூரம் கடலின் நிறத்தை வேறுபடுத்திக் கரிய கடலைச் செந்நிறமாக்கின. கைம்மலை : யானை சுவர் இங்கே கரை எனும் பொருளினது. உவமேயமாகிய சேணமும் உவமானமாகிய படகும் என இரு பொருளையும் 'பண்ணை' என்ற ஒரு சொல்லே தந்துள்ளது - சிலேடையுருவகவணி. சேணங்களில் பல வகையிரத்தினங்கள் பதிப்பதும் படகுகளில் பல வகை இரத்தினங்களைக் கொண்டு வந்து சேர்த்தலும், கருதிப் பண்ணைக்குப் 'பவரினப் படுபணி குவிக்கும்' என்ற அடைமொழி கொடுத்தார், அரோ - ஈற்றசை. நதிக்கு அமையக் கூடிய நுரை, சுவர், சுழி பண்ணை முதலியன இரத்த ஆற்றுக்கும்' உள்ளனவாயின. 120 |