2997.தெரி கணை மூழ்கலின்
     திறந்த மார்பினர்,
இரு வினை கடந்து போய்
     உம்பர் எய்தினார்,
'நிருதர்தம் பெரும் படை
     நெடிது; நின்றவன்
ஒருவன்' என்று, உள்ளத்தின்
     உலைவுற்றார், சிலர்.

    தெரி கணை மூழ்கலின் - இராமனால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அம்புகள் தைத்துப் பாய்தலால்; திறந்த மார்பினர் சிலர் - பிளக்கப்பட்ட
மார்புகளையுடைய சில அரக்கர்கள்; இருவினை கடந்து போய் -
தம்முடைய நல்வினை தீவினை மாய; உம்பர் எய்தினார் - மேலுலகம்
அடைந்த சில அரக்கர்கள்; 'நிருதர் தம் பெரும்படை நெடிது -
அரக்கர்களுடைய பெரிய சேனையோ மிக நீண்டது; நின்றவன் -
(இவர்களை எதிர்த்து) நின்ற இராமபிரானோ; ஒருவன்' என்று -
துணையற்ற ஒருவனே' என்று கருதி; உள்ளத்தின் உலைவு உற்றார் -
மனத்தில் அச்சங் கொண்டார்கள்.

     அரோ : ஈற்றசை.                                    123