திரிசிரா இரு சிரங்களை இழத்தல்

3001. சூழ்ந்த தார் நெடும் படை,
     பகழி சுற்றுறப்
போழ்ந்து உயிர் குடித்தலின்,
     புரளப் பொங்கினான்,
தாழ்ந்திலன்; முத் தலைத்
     தலைவன், சோரியின்
ஆழ்ந்த தேர், அம்பரத்து
     ஓட்டி ஆர்க்கின்றான்.

    சூழ்ந்த தார் நெடும்படை - தன்னைச் சூழ்ந்துள்ள அணிவகுத்து
நிற்கும் பெரிய அரக்கச் சேனைகளை; பகழி - இராமபாணங்கள்; சுற்றுறப்
போழ்ந்து -
சுற்றிலும் வளைத்துக் கொண்டு பிளந்து; உயிர் குடித்தலின் -
(அவ் அரக்கர்களின்) உயிர்களைப் பருகியதால்; புரள - (அவர்கள்) கீழே
விழுந்து புரள; முத்தலைத் தலைவன் - (அதைக் கண்டு) திரிசிரா என்னும்
படைத்தலைவன்; பொங்கினான் - கோபங் கொண்டவனாகி; தாழ்ந்திலன் -
தாமதிக்காது; சோரியின் ஆழ்ந்த தேர் - இரத்த வெள்ளத்தில்
அழுந்தியிருந்த தனது தேரை; அம்பரத்து ஓட்டி - ஆகாயத்திலே
செலுத்தி; ஆர்க்கின்றான் - முழங்குகின்றான்.

     இரத்தச் சேற்றில் அழுந்தியிருந்ததால் தரை மீது செல்லஇடமில்லாமல்
திரிசிரா என்பவன் வான் வழியே தன் தேரைச்செலுத்தினான், என்பது.
அம்பரம் - ஆகாயம்.                                          127