3003. தூவிய சரம் எலாம் துணிய,
     வெங் கணை
ஏவினன் இராமனும்;
     ஏவி, ஏழ்-இரு
பூ இயல் வாளியால், பொலம்
     கொள் தேர் அழித்து,
ஆவி, வெம் பாகனை,
     அழித்து மாற்றினான்.

    தூவிய சரம் எலாம் - (அந்தத் திரிசிரா) சொரிந்த அம்புகளெல்லாம்;
துணிய - துண்டுபட்டு அழியுமாறு; இராமனும் - இராமபிரானும்;
வெங்கணை ஏவினன் - கொடிய அம்புகளைத் தொடுத்தான்; ஏவி -
அவ்வாறு தொடுத்து; பூ இயல் ஏழ் இரு வாளியால் - பொலிவுடைய
பதினான்கு பாணங்களால்; பொலம்கொள் தேர் அழித்து - பொன்
மயமான அவன் தேரை நாசப்படுத்தி; வெம் பாகனை - கொடிய
அவனுடைய தேர்ச் சாரதியையும்; ஆவி அழித்து மாற்றினான் -
உயிரழித்து அப் போர் நிலையை மாறுபடச் செய்தான்.

     இராமன், தன்னை மறையத் தூவிய அம்புகளைத் துண்டித்துப்
பதினான்கு அம்புகளை ஏவித் திரிசிராவின் தேரையழித்துத் தேர்ப்
பாகனையும் ஒழித்தான் என்பது.

     பூ இயல் வாளி - பொலிவு பொருந்திய அம்பு.               129