கலிநிலைத் துறை 3007. | வில் இழந்தனன் என்னினும், விழித்த வாள் முகத்தின் எல் இழந்திலன்; இழந்திலன் வெங் கதம்; இடிக்கும் சொல் இழந்திலன்; தோள் வலி இழந்திலன்; சொரியும் கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கு எனத் திரிதல். |
வில் இழந்தனன் என்னினும் - (அத் திரிசிரன்) வில்லையிழந்து விட்டானென்றாலும்; விழித்த வாள் முகத்தின் எல் இழந்திலன் - உறுத்துப் பார்க்கின்ற ஒளிமிக்க தனது முகத்தின் ஒளியை இழந்துவிடவில்லை; வெம் கதம் இழந்திலன் - கொடிய கோபத்தை இழந்தானில்லை; இடிக்கும் சொல் இழந்திலன் - இடி முழக்கம் போலப் பேசும் வீர வார்த்தைகளை இழந்தானில்லை; தோள் வலி இழந்திலன் - தோள்களின் வலிமையையும் இழந்தானில்லை; சொரியும் கல் இழந்திலன்- (இராமன்மேல்) பொழியும் கற்களை இழந்தானில்லை; கறங்கு எனத் திரிதல் இழந்திலன் - காற்றாடி போலச் சுழன்று திரிவதையும் விட்டுவிட்டானில்லை. வில் ஒழிந்த பின்பும் அத் திரிசிரன் அச்சமின்றி வீரமொழிகளைப் பேசிக் கொண்டு, தான் ஒருவனே எல்லாப் பக்கமும் சுற்றி வந்து தோள் வலிமையால் கற்களையெடுத்து இராமன் மேல் சொரிந்தான் என்பது. கறங்கு : காற்றாடி. அவன் முகத்தில் ஒளி இழவாமையையும், மனத்தில் துணிவு இழவாமையையும் அறியக் கிடத்தலை விளக்குவார் 'முகத்தின் எல் இழந்திலன்' என்றார். எல் - விளக்கம், ஒளி. 133 |