திரிசிரா மடியக் கண்ட அரக்கர்கள் சிதறியோடுதல்

3009. அற்ற தாளொடு தோளிலன்,
     அயில் எயிறு இலங்க,
பொற்றை மா முழைப் புலாலுடை
     வாயினின், புகுந்து
பற்ற ஆதரிப்பான்தனை
     நோக்கினன்; பரிவான்,
கொற்ற வார் சரத்து, ஒழிந்தது ஓர்
     சிரத்தையும் குறைத்தான்.

    அற்ற தாளொடு தோளிலன் - கால்களும் கைகளும்
அறுபட்டவனாகி; அயில் எயிறு இலங்க - (அதற்குப் பின்பும்) தன் கூரிய
பற்கள் தோன்றுமாறு; பொற்றை மா முழைப் புலால் உடை வாயினின் -
மலையின் பெரிய குகை போன்ற புலால் நாற்றம் வீசும் தன் வாயினால்;
புகுந்து பற்ற ஆதரிப்பான்தனை - (தன் மேல்) விழுந்து தனை
(இராமனைப்) பற்றி விழுங்க விருப்பமுற்ற அத் திரிசிரனை; நோக்கினன் -
பார்த்து (இராமன்); பரிவான் - (அவன்மேல்) இரக்கங் கொண்டவனாய்;
கொற்ற வார் சரத்து - வெற்றி தரும் தனது நீண்ட அம்பினால்; ஒழிந்தது
ஓர் சிரத்தையும் குறைத்தான் -
அறுக்கப்படாது எஞ்சியிருந்த ஒரு
தலையையும் துணித்தான்.

     படைக் கருவிகளையிழந்தவனாய்க் கால் கைகளாகிய முக்கிய
உறுப்புக்களும் அறுபட்டு நின்ற நிலையிலும் அவனது கொடுமை நீங்காமல்
இராமனை விழுங்கிவிடக் கருதியவனிடம் இராமன் இரக்கப்பட்டு அவனது
எஞ்சிய சிரத்தையும் துண்டித்து வீழ்த்தினான் என்பது. பொற்றை - மலை. 135