3011. கணத்தின் மேல் நின்ற வானவர்
     கை புடைத்து ஆர்த்தார்,
பணத்தின்மேல் நிலம் குழியுற,
     கால் கொடு பதைப்பார்,
நிணத்தின்மேல் விழுந்து அழுந்தினர்
     சிலர்; சிலர், நிவந்த
பிணத்தின்மேல் விழுந்து உருண்டனர்,
     உயிர் கொடு பிழைப்பார்.

    கணத்தின் மேல் நின்ற வானவர் - (அரக்கர்களின் கால்கள்
களத்தில் கிடந்த குடல்களில் சிக்கியதைக் கண்டு) கூட்டமாக வானத்தில்
திரண்டு நின்ற தேவர்கள்; கைபுடைத்து ஆர்த்தார் - மகிழ்ச்சியோடு
பரிகசித்துக் கைகொட்டி யாரவாரித்தார்கள்; சிலர் - சில அரக்கர்கள்;
பணத்தின் மேல் நிலம் குழி உற - (ஆதிசேடனாகிய பாம்பின்)
படங்களின் மேலுள்ள பூமி குழிபடும்படி; கால் கொடு பதைப்பார் -
(தங்கள்) கால்களைப் பதிய வைத்து விரைந்தோடினவர்களாய்; நிணத்தின்
மேல் விழுந்து அழுந்தினர் -
(அக் களத்தில் கிடந்த) கொழுப்பில்
வழுக்கி விழுந்து (அந்தச் சேற்றிலே) அழுந்தினார்கள்; சிலர் - மற்றும்
சிலர்; உயிர் கொடு பிழைப்பார் - உயிர் நீங்காதபடி காத்து கொண்டு
பிழைத்தோட முயன்றவர்களாய்; நிவந்த பிணத்தின் மேல் விழுந்து
உருண்டனர் -
உயர்ந்து கிடந்த பிணங்களின்மேல் இடறி விழுந்து கீழே
புரண்டார்கள்.

     ஓடிச் செல்லும் அரக்கர்களின் உடற்பார மிகுதியையும் செல்லும்
வேகத்தின் மிகுதியையும் இச் செய்யுள் விளக்குகின்றது. 'பணத்தின்
மேனிலம் குலைவுறல்' - ஓடும் அரக்கரின் வேகத்தாலும் பளுவாலும்
ஆகும்.                                                    137