புறங்கொடுப்பவரைத் தேற்றித், தூடணன் வீரவுரை கூறல்

3015. அனையர் ஆகிய அரக்கரை, ' "ஆண்
     தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனித்தரை
     வெருவன்மின்" என்னா,
நினையும் நான் உமக்கு உரைப்பதும்
     உண்டு' என, நின்றே,
துனையும் வாம் பரித் தேரினன்
     தூடணன் சொன்னான்.

    அனையர் ஆகிய அரக்கரை - அத்தன்மையராய்
அஞ்சியோடுகின்ற இராக்கதர்களை (நோக்கி); துனையும் வாம் பரித்
தேரினன் தூடணன் -
விரைந்து தாவிச் செல்லும் குதிரைகள் பூட்டப்
பெற்ற தேரின் மேல் ஏறியவனான தூடணன் என்னும் படைத் தலைவன்;
"ஆண் தொழிற்கு அமைந்த - 'ஆண்மைச் செயலுக்குப் பொருந்திய;
'வினையம் நீங்கிய மனித்தரை - தந்திரங்களை மேற்கொள்ளாத இந்த
மனிதர்களைக் கண்டு; வெருவன்மின்" என்னா - நீங்கள் அஞ்சாதீர்கள்
என்று கூறி; 'நான் நினையும் உமக்கு உரைப்பதும் உண்டு' என - 'நான்
கருதக் கூடிய ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ள' தென்று;
நின்று சொன்னான் - ஓரிடத்தில் நின்று (அவர்களுக்குக்) கூறினான்.

     தங்களைப் போல மாயையால் வஞ்சகப் போரைச் செய்யாமல்
சூதின்றித் தருமப் போர் செய்வதையே இராமலக்குவர்க்கு ஒரு குறையாக்கி
'ஆண் தொழிற்கு அமைந்த வினையம் நீங்கிய மனித்தர்' என்றான்.
மனித்தர் - விரித்தல் விகாரம். வினையம் - சாமர்த்தியம் அல்லது
உபாயமும் ஆம்.                                             141