3016. | 'வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூசார்; நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி, அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அருந் துணை ஆமோ? |
'வச்சை ஆம் எனும் - பழிப்புக்கு இடமாகும் என்று சொல்லப்படுகின்ற; பயம் மனத்து உண்டு என வாழும் - அச்சமானது தமது மனத்திலே உள்ளதாக உயிர் வாழ்கின்ற; கொச்சை மாந்தரை - இழிந்த மனிதர்களுக்கு; கோல்வளை மகளிரும் - அழகான வளையல் அணிந்த பெண்களும்; கூசார் - அஞ்சமாட்டார்கள் (அதுவல்லாமல்); நிச்சயம் எனும் கவசம்தான் - மனத் துணிவு என்கின்ற கவசமே; நிலை நிற்பது அன்றி - (போரில் உயிரைக் காத்து) நிற்கக் கூடியதல்லாமல்; அச்சம் என்னும் ஈது - (உங்களிடமுள்ள) பயம் என்கின்ற இக்குணம்; ஆர் உயிர்க்கு அருந்துணை ஆமோ - அரிய உயிருக்கு அருமையான காக்கும் துணையாகுமோ (ஆகாது). பழிப்புக்குக் காரணமான பயத்தை மனத்திலே கொண்டு நாமும் பிழைத்திருக்கிறோமென்று சொல்லியவாறு இழிந்த மனிதர்களிடம் மகளிரும் கூசாது அலட்சியம் செய்வார்கள்; ஆகவே, இவ்வாறான அச்சத்தைவிட்டு மனவுறுதி கொள்வதே உயிர்க்குக் கவசம் போல அரணாகும் என்பது. வசையென்பது எதுகை நோக்கி வச்சையென விரிந்தது. கோல் - கோலம் என்பதன் விகாரம்; கோலம் - அழகு. 'அச்சத்தையே குணமாகக் கொண்ட மாந்தரைக் கண்டு அச்சமே அற்ற அரக்கர் அஞ்சலாமோ' என்று கூறினான், தூடணன். கொச்சை மாக்கள் - இழிந்த மனிதர். 142 |