3021.'ஆர வாழ்க்கையின் வணிகராய்
     அமைதிரோ? அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து
     உழுதிரோ?-வெறிப் போர்த்
தீர வாழ்க்கையின் தேவரைச்
     செருவிடைப் பறித்த
வீர வாட் கையீர்!-எங்ஙனம்
     வாழ்திரோ? விளம்பீர்.'

    'வெறிப் போர் - மூர்க்கச் செயலை மேற் கொண்ட போரில்; தீர
வாழ்க்கையின் -
வீரத்தோடு கூடிய வாழ்வினால்; தேவரைச் செரு
விடைப் பறித்த -
தேவர்களிடமிருந்து போரில் பறித்துக் கொண்ட; வீர
வாள் கையீர் -
வலிமையுள்ள வாளைக் கையில் ஏந்தியவர்களே!; (போரில்
தோற்றோடிப் போர்த் தருமத்தையிழந்த நீங்கள் போர்த் தொழிலை விட்டு);
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ - இனி முத்து முதலிய
பண்டங்களை விற்று வாழும் வணிகர்களாக அமைவீர்களோ? (அல்லது);
அயில் வேல் வீர வாள் - (உழவராகிக்) கூர்மையான வேலையும்,
வலிமையுள்ள வாளினையும்; கொழு என மடுத்து உழுதிரோ - ஏரின்
கொழுவாக மண்ணில் ஆழ்த்தி உழுது பயிரிடப் போகிறீர்களோ?;
எங்ஙனம் வாழ்திரோ - எவ்வாறு வாழப் போகின்றீர்கள்?; விளம்பீர்' -
சொல்லுங்கள்.

     இவ்வாறு போரில் தோற்றோடி வெட்கங் கெட்ட உங்களுக்குப் போர்
வீரராக வாழ வகையில்லை : இனி, நீங்கள் பண்டங்களை விற்று வாழும்
வணிகராகவோ, உழுதுண்டு வாழும் வேளாளராகவோ வாழ்வதே
உங்களுக்கு அமைவது என்றான். கையீர் - விளி; ஓ - ஐயம்.         147