தூடணன் எதிர்த்து வர, இராமன் அவனோடு போர்தொடங்குதல் 3022. | என்று, தானும், தன் எறி கடற் சேனையும், 'இறை நீர் நின்று காண்டிர் என் நெடுஞ்சிலை வலி' என நேராச் சென்று தாக்கினன்; தேவரும் மருள்கொண்டு திகைத்தார்; நன்று! காத்தி' என்று, இராமனும் எதிர் செல நடந்தான். |
என்று - இவ்வாறு தூடணன் கூறி; 'நீர் இறை நின்று - நீங்கள் சிறிது நேரம் ஓடாது நின்று; என் நெடுஞ் சிலை வலி - எனது நீண்ட வில்லின் வலிமையை; காண்டிர்' என - காண்பீர்களாக என்று சொல்லி; தானும் தன் எறிகடல் சேனையும் - தானும் தன்னுடைய அலை வீசும் கடல் போன்ற சேனையுமாக; நேராச் சென்று தாக்கினன் - (இராமனுக்கு) எதிராகச் சென்று போர் செய்தான்; (அந்த உக்கிரத்தைக் கண்டு); தேவரும் மருள் கொண்டு திகைத்தார் - தேவர்களும் மயக்கமுற்றுப் பிரமித்தார்கள்; இராமனும் - இராமபிரானும்; 'நன்று காத்தி' என்று - (உன் சேனையை) நன்றாகக் காத்துக் கொள் என்று சொல்லி; எதிர் செல நடந்தான் - (அவனுக்கு) எதிராக நடந்து சென்றான். திகைத்தல் - இன்னது செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் பிரமித்து நிற்றல் நின்று காத்தி : திறமையுண்டேல் என்னை எதிர்த்து நின்று உன்னையும் உன் சேனைகயையும் காப்பாற்றிக் கொள் என்று பெருமிதத்தோடு கூறிய வீர மொழி. 148 |