3025. | ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு, அரக்கர்தம் ஆவி தோய்ந்த; தோய்வு இலாப் பிறை முகச் சரம் சிரம் துமித்த; காய்ந்த வெஞ் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப் பாய்ந்த; வஞ்சகர் இதயமும் பிளந்தன, பல்லம். |
ஆய்ந்த - (இராமபிரானால்) ஆராய்ந்தெடுத்து எய்யப் பெற்ற; கங்கபத்திரங்கள் - கங்கபத்திரம் என்னும் ஒருவகை அம்புகள்; புக்கு - உடம்புக்குள் புகுந்து; அரக்கர் தம் ஆவி தோய்ந்த - அரக்கர்களின் மார்பிலே அழுந்தின; தோய்வு இலாப் பிறை முகச் சரம் - மேற் சொன்னவாறு அரக்கர் உடலில் புகாத அர்த்த சந்திர பாணங்கள்; சிரம் துமித்த - அவ் அரக்கர் சிலரின் தலைகளைத் துண்டித்தன; காய்ந்த வெம்சரம் - (இராமன் எய்த) மிகக் கொடிய சில அம்புகள்; நிருதர்தம் கவச மார்பு உருவ - அரக்கருடைய கவசம் அணிந்த மார்பு ஊடுருவும்படி; பாய்ந்த - நுழைந்தன; பல்லம் - வேறு சில அம்புகள்; வஞ்சகர் இதயமும் பிளந்தன - வஞ்சனை நிறைந்த அரக்கர்களின் நெஞ்சையும் பிளந்துவிட்டன. இச் செய்யுளில் கங்க பத்திரம், பிறைமுகச்சரம், சரம், பல்லம் ஆகிய பலவகை அம்புகள் குறிக்கப் பெற்றுள்ளன; அதனால் இது பொருட்பின்வரு நிலையணியாம். இராக்கதரைக் குறிக்க அரக்கர், நிருதர், வஞ்சகர் என்ற சொற்கள் அமைந்தமையால் இதுவும் பொருட் பின்வரு நிலையணியாம். கங்க பத்திரம் - கழுகின் இறகையுடையது என்னும் காரணப் பொருளது. பிறைமுகச் சரம் - பிறைவடிவில் அமைந்த அம்பு. 151 |