3027. | ஆர்த்து எழுந்தனர் வானவர்; அரு வரை மரத்தோடு ஈர்த்து எழுந்தன, குருதியின் பெரு நதி; இராமன் தூர்த்த செஞ் சரம் திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து, போர்த்த வெஞ் சினத்து அரக்கரைப் புரட்டின, புவியில். |
(அதுகண்டு) வானவர் - தேவர்கள்; ஆர்த்து எழுந்தனர் - (மகிழ்ச்சியால்) ஆரவாரஞ் செய்தார்கள்; குருதியின் பெருநதி - இரத்தப் பேராறுகள்; அருவரை மரத்தோடு - அழித்தற்கரிய மலைகளையும் மரங்களையும்; ஈர்த்து எழுந்தன - இழுத்துக் கொண்டு சென்றன; இராமன் தூர்த்த செஞ்சரம் - இராமபிரான் ஏவி நிரப்பிய செவ்விய அம்புகள்; திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து - எல்லாத்திக்குகளிலும் தொடர்ந்து சென்று; போர்த்த வெம் சினத்து அரக்கரை - அத் திசைகளை(த் தம் கூட்டத்தால்) மறைத்த கொடிய சினங்கொண்ட இராக் கதர்களை; புவியில்புரட்டின - தரையில் புரளும்படி செய்தன. இராமனுடைய செஞ்சரம் திசைதொறும் தொடர்ந்து போர்த்த வெஞ் சினத்து அரக்கரைப் புவியில் புரட்டின என்றும் உரைக்கலாம். செஞ்சரம் - வளைவில்லாத நேரிய அம்பு; பகைவரின் இரத்தம் தோய்ந்து நுனி சிவந்த அம்பு; தீயவரை அழித்து நன்மை புரியும் அம்பு. 153 |