3030.அறம் கொளாதவர் ஆக்கைகள்
     அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன, கணிப்பு இல;
     பெருங் கடு விசையால்,
கறங்கு போன்றுளது ஆயினும்,
     பிணப் பெருங் காட்டில்
இறங்கும், ஏறும்; அத் தேர் பட்டது
     யாது என இசைப்பாம்?

    அறம் கொளாதவர்-தருமத்தைக் கைக் கொள்ளாத
அரக்கர்களுடைய; ஆக்கைகள் - உடல்கள்; அடுக்கிய அடுக்கல் -
ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்ததனாலாகிய மலைகள்; பிறங்கி நீண்டன -
உயர்ந்து நீண்டுள்ளவை; கணிப்பு இல - எண்ணிக்கை இல்லாதனவாம்;
பெருங்கடு விசையால் - (ஆதலால்) மிகக் கடுமையான வேகத்தால்;
கறங்கு போன்று உளது ஆயினும் - காற்றாடி போன்று உள்ளதானாலும்;
அத்தேர் - தூடணன் ஏறிய அத்தேர்; பிணப் பெருங்காட்டில் -
பிணக்குவியல்களாகிய காட்டிலே; இறங்கும் ஏறும் - பள்ளமான
இடங்களில் இறங்கும் மேடான இடங்களில் ஏறும்; (அத்தேர்) பட்டது -
உற்ற இடர்நிலையை; யாது என இசைப்பாம் - நாம் என்ன வென்று
சொல்லுவோம்? (கூறவியலாது).

     தூடணனது தேர் எண்ணிக்கையற்ற மலை போன்ற
பிணக்குவியல்களில் ஏறியிறங்குதலால் இடறி மிகத் துன்பப்பட்டது என்பது.
விரைந்து செல்வதில் தேர்க்குக் காற்றாடி உவமை.                  156