3031. அரிதின் எய்தினன் - ஐ-ஐந்து
     கொய் உளைப் பரியால்
உருளும் ஆழியது ஒரு தனித்
     தேரினன், உலகத்து
இருளை நீக்கிய இந்துவின்
     பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணைக் கூற்று எதிர்,
     ஆவி சென்றென்ன.

    (தூடணன்) கொய் உளை ஐ ஐந்து பரியால் - அழகாகக்
கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர்களையுடைய இருபத்தைந்து குதிரைகள்
பூட்டியதால்; உருளும் ஆழியது - (எளிதில்) உருளும்
சக்கரங்களையுடையதான; ஒரு தனித் தேரினன் - ஒப்பற்ற தனித்த
தேரையுடையவனாய்; கூற்று எதிர் - யமனுக்கு எதிரிலே; ஆவி சென்று
என்ன -
உயிர் வலியச் சென்றாற் போல; உலகத்து இருளை -
இவ்வுலகிலுள்ள இருட்டை; நீக்கிய இந்துவின் - ஒழிக்கின்ற சந்திரன்
போல; பொலிகின்ற இராமன் - விளங்குகின்ற இராமனுடைய; தெருளும்
வார்கணை -
தெளிவான நீண்ட அம்புக்கு எதிரில்; அரிதின் எய்தினன் -
மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தான்.

     யமனுக்கு எதிரே அவனால் கவரப்படுவதற்குரிய உயிர் வந்து நின்றாற்
போல இராமபிரான் கணைக்கு எதிரே இருபத்தைந்து குதிரைகள் பூட்டிய
தனித் தேரையுடைய தூடணன் அரிதின் எய்தினான் என்பது.

     இராமனுக்குச் சந்திரன் உவமை - குளிர்ச்சி தந்து உயிர்களை
மகிழ்விப்பதால். குறித்த இலக்கைத் தவறாது அழிப்பது பற்றி இராம
பாணத்திற்குக் கூற்றுவன் ஒப்பாவான்.

     இராமபாணத்தால் இவன் உடனே அழிதற்குக் காரணமாதலால்
'கூற்றெதிர் ஆவி சென்றென்ன' என்றார்.

     'இருளின் நீங்கிய இந்து' - சூழ்ந்திருந்த அரக்கர் பட்டொழியத் தான்
மட்டும் நின்ற இராமபிரானுக்கு உவமையாம்.                      157